Saturday, July 31, 2010

மனம்+: மரண பயம்

உலகத்தில் 100க்கும் மேற்பட்ட பயப் பிரச்சினைகள் உள்ளன. ஆனால் எல்லோருக்கும் வரக் கூடிய ஒரே பயம் மரண பயம்தான். மேலும் இந்த மரண பயம் மட்டுமே ஒருவரை கொல்லாமலே கொல்லக் கூடிய பயம்.


மரணம் என்பதை பற்றி நாம் சாதரணமாக யோசிக்க மாட்டோம். நம் கண் முன் இறந்தவரை பார்க்கும்போதோ அப்படிப்பட்ட செய்தியை கேட்கும்போது நம் மனதில் ஏதோ ஒரு வலி ஏற்படும். அதுவும் அவர் நமக்கு வேண்டியவராக இருந்தால் பாதிப்பு அதிகம்.

நீங்கள் இறந்தவர்களை பார்த்திருக்கலாம் ஆனால் இறக்கும் முன் அவர்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என யோசித்திருக்கிறீர்களா.

ஒரு இளைஞரின் வாழ்வில் நடந்த சம்பவத்தை அவரின் நிலையிலில் சொல்கிறேன்.

நான் என் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு காரில் என் நண்பர்களுடன் திரும்பி வந்து கொண்டிருந்தேன். நான் தான் காரை ஓட்டிக் கொண்டிருந்தேன். அது நடு இரவு அந்த சாலையில் நாங்களும் எங்களுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு ட்ரக்கும் மட்டுமே இருந்தோம். எங்களுக்கு முன்னால் இருந்த டிரக் வலது புறம் திரும்புவதற்காக இன்டிகேட்டர் லைட் போட்டிருந்தது. ஆனால் அது வலது புறம் நகரவில்லை. எனவே நான் அதை ஓவர் டேக் செய்யலாம் என முடிவெடுத்தேன்.  நான் அந்த டிரக்கிற்கு கொஞ்சம் பக்கத்தில் அதாவது பாதி தூரம் அருகில் வந்தபோது, அந்த ட்ரக் அங்கிருந்து ஒரு ரோட் எண்ட்ரன்சில் வலது பக்கமாக திரும்ப முயற்சித்தது. இதனால் நாங்கள் வெளியே போக முடியவில்லை. வலது பக்கமாக வண்டியை சிறிது நகர்த்தினால் அங்கே ஒரு ஆழமான பள்ளம். வண்டி 60-79 கிமீல் செல்கிறது. என் மனதில் வண்டி பெரிய விபத்தை சந்திக்கப் போகிறது. நான் இறக்கப் போகிறேன் என தெரிகிறது. அப்போது அந்த நேரம் மிக இருளாக இருந்தது. இறப்பு என்பது தவிர்க்க முடியாதது என்பது தெரிந்திருந்தும், என் வாழ்க்கை முடியப் போகிறது என்ற நினைப்பு என் மனதை என்னவோ செய்தது.

இந்த சம்பவத்தை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.

மரண பயம் உளவியலில் தானடோபோபியா(Thanatophobia) என அழைக்கப்படுகிறது. மரண பயம் என்பது எல்லோர் மனதிலும் எப்போதும் இருக்கிறது. ஆனால் அவ்வப்போதுதான் வெளிப்படுகிறது.

ஒரு புத்த துறவி சொன்னது. “மரணம் என்பது மிக எளிதானது. நீங்கள் மூச்சை விடுகிறீர்கள். ஆனால் மூச்சை இழுக்கவில்லை.”
இன்றைய நவீன உலகில் மரணம் பற்றிய பார்வை மாறிவிட்டது. இப்போது தினமும் செய்தித்தாள், தொலைக்காட்சிகளில் நாம் காணும் வன்முறைகள், விபத்துகள், கொலைகள், தற்கொலைகள், கடத்தல் இது போன்ற பல விஷயங்கள் மரணத்தை நமக்கு அடிக்கடி உணர்த்திக் கொண்டிருக்கின்றன. சிறுவர் விளையாடும் வீடியோ கேம்ஸ், படங்கள் போன்றவற்றில் கொடூரங்களும் வன்முறைகளும் பெருகிப் போய் விட்டது.

இறப்பிற்கு பின்னால் என்ன ஆகும்?

இந்த கேள்வி பலருக்கும் உண்டு. பல மதங்களில் இதைப் பற்றிய ஆராய்ச்சிகள் கோட்பாடுகள் உண்டு. மரண பயன் சமயம் சார்ந்த விஷயமும் ஆகும். சிலர் தங்கள் மதத்தில் கூறியுள்ளபடி மரணத்திற்கு பிறகு என்ன ஆகும் என தமக்கு தெரிந்திருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனாலும் அவர்கள் மரணம் பற்றி கவலைப்படுவார்கள் “நான் நினைப்பது தவறானால்?”
உளவியல் கூற்றுப்படி மிகவும் புத்திசாலித்துடன் எதையும் கேள்வி கேட்டு ஆராய்பவர்களுக்கு மரண பயம்(தானடோபோபியா)  வர வாய்ப்பு அதிகம் இருக்கிறது. ஏனெனில் அவர்கள் தங்கள் மத விளக்கங்களை மிகவும் கேள்வி கேட்டு ஆராய்வார்கள்.

சிலர் அடிக்கடி தங்கள் உடல்நலத்தை குறித்து கவலைப்படுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். மேலும் சிலர் சடங்கு சம்பிரயதாயங்களையும் அடிக்கடி செய்யக் கூடும். இவை உச்சபட்ச நிலைக்கு செல்லும்போது, அதாவது அவர்கள் அதில் விடாப்பிடியாய் அடிக்கடி செய்யும்போது அது கவலைக்குரியதாகிறது.

மரணபயம் அதிகமாகும்போது அவர்கள் தன் மரணத்தைக் குறித்து மட்டும் கவலைப்படாமல் தன்னைச் சார்ந்தவர்களின் மரணத்தைக் குறித்தும் கவலைப்படுவார்கள். மேலும் மரணம் சம்பந்தபட்ட சின்னங்கள், அறிகுறிகள், பொருட்கள், இடங்கள் போன்றவற்றை பார்த்தும் பயப்படுவார்கள்.

தானடோஃபோபியா ஏற்படக் காரணம் ஒருவர் மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்புவது, தனக்கு மிக நெருக்கமானவர்களின் மரணம், ஊடகத்தில் அறிய நேரிடும் கொடிய சம்பவங்கள் போன்றவை ஆகும்.

மரண பயம் என்பது சிறுவயதில் இருந்தே தொடங்கி விடுகிறது. குழந்தைகளிடம் பேய்கள் போன்றவற்றை சொல்லும்போது அவை பயப்படக் காரணம் மரண பயமே. அந்த வயதில் மரணத்தை முழுமையாக புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் கூட, அவர்களின் உள்மனது தனக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ என்ற அச்சத்தால் நிறைந்திருக்கும்.

நாம் வளர வளர மரணம் பற்றி நம் பார்வை மாறுகிறது. மரணத்தை பற்றி நாம் மறந்து விடுகிறோம். மரணம் சம்பந்தமான விஷயங்கள் நம் வாழ்வில் குறுக்கிடும்போது அந்த பயம் எழும். மீண்டும் மறைந்து விடும்.

ஆனால் வயதான பின் இந்த பயம் மீண்டும் அதீதமாகிறது. இதோ முடியப்போகிறது வாழ்க்கை என்ற நினைப்பு மனதில் வந்த நொடியே நாம் இறக்க ஆரம்பிக்கின்றோம்.
வயதானவர்களுக்கு ஏற்படும் மரணபயம் அவர்களின் துணை இறந்து போகும்போது மிகவும் அதிகமாகிறது. தாங்கள் ஒரு தனிமைக்கு தள்ளப்பட்டதாக அவர்கள் நினைக்கின்றனர்.

ம்ரணத்தை நமக்கு நிச்சயிக்கப்பட்டது. வேறு வழியில்லை, என்ற நினைப்பில் நம் வாழ்வில் நமக்கான கடமைகளை நாம் செய்து முடிக்க நினைக்கிறோம். தன் கடமைகள் முடிந்து விட்டன, நான் என் வாழ்வில் எல்லா சந்தோசங்களையும் கண்டு விட்டேன். என் வாழ்வு மனநிறைவுள்ள வாழ்க்கை என நினைப்பவரால் கூட மரணத்தை ஏற்க முடியாது.

அதீத அளவுக்கு அதிகமான சந்தோசமோ அல்லது துக்கமோ தான் மரணத்தை சந்திக்கும் துணிவை அளிக்கிறது. ஆனால் அதுவும் சில கணங்கள்தான் நம் மனதில் நீடிக்கும். இதுவே தற்கொலை செய்துகொள்பவர்கள் மரணத்தை சந்திக்க தயாராகுவதற்கான காரணம்.

அதீத மரண பயம் உடையவர்கள் மனநல மருத்துவர்களை அணுகுவது நல்லது. இல்லையென்றால் அவர்கள் உடல்நிலை மிகவும் மோசமாகும்.

நான் கூறும் அறிவுரை மரண பயம் உங்களுக்கு வரும்போது உங்களுக்கு பிடித்தமான ஏதாவது ஒன்றைப் பற்றி சிந்தியுங்கள், உங்களுக்கு பிடித்தமானவருடன் பொழுது போக்குங்கள். முக்கியமாக தனிமையில் இருக்காதீர்கள்.

மகிழ்ச்சியாக வாழ்வோம் மரணம் வரும் வரை.....

TIMEPASS


1 comment: